கோலாலம்பூர்: மலேசியாவில் மொத்தம் 2.72 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறை அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்ற மற்றும் பெறாத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்ட டாக்டர் லீ பூன் சியே (PH-Gopeng) க்கு எழுதிய பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.
“(மொத்தம்) 1.59 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வெளி நாட்டினருக்கு முழுமையான இரு டோஸ் தடுப்பூசிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 22 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் துறையின் பதிவுகளின்படி, நாட்டில் மொத்த மக்கள்தொகை 32.66 மில்லியனில் 2.69 மில்லியன் வெளிநாட்டவர்கள் இருப்பதாகவும் டாக்டர் ஆதாம் கூறினார்.
மேலும் இந்த ஆண்டு ஜூலை 31 வரை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர்கள் அமைப்பில் (UNHCR) பதிவுசெய்யப்பட்ட 56 நாடுகளைச் சேர்ந்த 179,455 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.