கோலாலம்பூர்: (மித்ரா) அரச நிதி தவறாக கையாளப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) யில் புகாரளிக்குமாறு, முன்னாள் தேசிய ஒற்றுமை அமைச்சர் பி.வேதமூர்த்தி ஹலிமா சாதிக்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் காலத்தில் மித்ராவின் நிதி தவறாக கையாளப்பட்டதாக நேற்று அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு, முன்னாள் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) மானியங்களுக்கான ஒப்புதல் ஒற்றுமை அமைச்சராகவும், மித்ரா டைரக்டர் ஜெனரலாகவும் இருந்த வேதமூர்த்தி அக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
மேலும் முந்தைய நிர்வாகத்தின் உறுப்பினர்களால் நிதி தவறாக கையாளுதல், அத்துடன் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகளால் மித்ரா ஏற்கனவே சிக்கியிருப்பதாகவும் வேதா கூறினார்.
இந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்காக, தாம் அமைச்சரானதன் பிறகு, தலைமை கணக்காய்வாளர் அலுவலகம், நிதி அமைச்சகம், பிரதமர் துறை மற்றும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து ஒரு புதிய மற்றும் வெளிப்படையான அமைப்பை உருவாக்கியதாக வேதா கூறினார்.
இந்த அமைப்பின் மூலமாக, பல்வேறு குழுக்களைக் கொண்ட நான்கு அடுக்கு மதிப்பீட்டு முறைக்கு வழிவகுத்தது. மித்ராவிடம் மானியங்கள் பெறுநர்களுக்கு MACC விளக்கமளித்ததுடன் அது தொடர்பான அறிவிப்பு பாரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“அந்த நிதிகளை அங்கீகரிப்பதில் இறுதியாக முடிவு செய்யும் கடப்பாடு பிரதமர் துறையின் தலைமை அதிகாரியிடமே இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
“அதற்குமேல், மானியங்களின் பங்கீடு தொடர்பான அனைத்து விடயங்களும் இணையதளத்தில் காண்பிக்கப்பட்டது என்றும் அவை பொதுமக்களுக்கு அணுக இயலுமானதாகவும், சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக நடத்தப்படும் படிப்புகள் மற்றும் திட்டங்களை அவர்கள் மதிப்பீடு செய்யவும் முடியும் என்றார்.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பிறகு பெரிக்கத்தான் நேஷனல் பொறுப்பேற்றபோது, அதாவது மார்ச் 2020 இல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அமைப்பு அகற்றப்பட்டது என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் MACC உடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அமைச்சகம் கூறியது போலவும், தனது கண்காணிப்பில் மித்ரா நிதி தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஹலிமாவுக்கு உறுதியாகத் தெரியும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் இணைந்து MACC யுல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வேதா கூறினார்.
மேலும் இந்த நிதி விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் எங்கள் இருவரையும் விசாரிக்கலாம். என்னைப் போல் அவருக்கும் மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கும். அறிக்கை அளிப்பதற்காக ஹலிமா ஒரு தேதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கும் போது, நானும் அதற்காக நேரம் ஒதுக்குவேன், ”என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.