கோலாலம்பூர்: மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 140 விவாகரத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை சட்டத்துறை அமைச்சர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூறினார்.
18 மாத காலப்பகுதியில் இ-ஷரியா (e-shariah) அமைப்பு மூலம் ஷரியா கோர்ட்டுகளில் முஸ்லீம் தம்பதியரால் மொத்தம் 66,440 விவாகரத்துகள் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
தாக்கல் செய்யப்பட்ட முஸ்லீம்களின் விவாகரத்து பதிவுகளில் சிலாங்கூர் 12,479 உடன் அதிக விவாகரத்து விகிதத்தைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜோகூர் (3,854), நெகிரி செம்பிலான் (3,473), பினாங்கு (2,978), மலாக்கா (2,402), பெர்லிஸ் (1,081) மற்றும் சரவாக் (561) விவாகரத்துக்கான பதிவுகளையும் கொண்டுள்ளது.
முஸ்லீம் அல்லாதவர்களின் 10,346 விவாகரத்துகள் மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை தாக்கல் செய்யப்பட்டன. இந்த தரவிலும் சிலாங்கூர் மாநிலமே 3,160 விண்ணப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது.
அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (2,893), பேராக் (1,209), ஜோகூர் (1,197), நெகிரி செம்பிலான் (861), மலாக்கா (449), பகாங் (386), கெடா (76), கிளந்தான் (45), பெர்லிஸ் (41) மற்றும் திரெங்கானு (29) விவாகரத்துகளையும் பதிவு செய்தன.
இதன் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களிடையே தினசரி சராசரியாக 18 விவாகரத்து வழக்குகள் உள்ளன.
மேலும் “முஸ்லிம்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 121 வழக்குகள் உள்ளன என்றும் கூறினார்.
ஒரு மணி நேரத்தில், ஐந்து தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள். நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது கூட விவாகரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ”என்று மாஸ் எர்மியாத்தி கூறினார்.
எவ்வாறாயினும், முஸ்லீம் தம்பதிகளின் புள்ளிவிவரங்கள் ஷரியத் நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி விண்ணப்பித்தவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று அவர் கூறினார், இது அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டு விவாகரத்தில் முடிவடையும் என்று அர்த்தமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நூர் அமீன் அஹமட் (PH-Kangar) , கடந்த மார்ச் 2020 முதல் அதாவது நடமாட்டக் கட்டுப்பாடு அமல் படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை, பதிவாகிய விவாகரத்து வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்களை அவர் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.























