கோலாலம்பூர், அக்டோபர் 18 :
கடந்த மாதம் பாலர் பள்ளி மாணவன் ஒருவரை காயப்படுத்தியதாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரான லோ கே சுவான், 22, நீதிபதி நூர் ஹஸ்னியா அப்துல் ரசாக் முன்பு தான் குற்றவாளி அல்ல என்று மறுத்தார்.
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, ஜாலான் ஸ்ரீ ஹர்தாமாஸ் 2 இல் உள்ள ஒரு பாலர் பள்ளியில், காலை 6 மணி முதல் மாலை 5.30 மணிவரையுள்ள காலப்பகுதியில், 6 வயது மற்றும் 11 மாத வயதுடைய சிறுவன் மீது லோ இந்தக் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சிறுவனின் தோள்ப்பட்டையில் காயம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குழந்தை சட்டம் 2001 இன் பிரிவு 31(1)a இன் கீழ் குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 50,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12,000 வெள்ளி ஜாமீனுடன் ஒரு ஆள் பிணையும் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது மற்றும் பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதையோ அல்லது வேறு வழியிலோ அவர்களை தொந்தரவு செய்யவும் கூடாது என்று லோவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும் வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
துணை அரசு வழக்கறிஞர் நூர்ஹானி முஹமட் அயூப் வழக்கு தொடர்ந்தார், லோ சார்பில் வழக்கறிஞர் சாரா வோங் ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.