கடந்த 24 மணி நேரத்தில் 4,782 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு , 7,414 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர், அக்டோபர் 25 :

கடந்த 24 மணி நேரத்தில் 4,782 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

கடந்த ஜூன் 22ஆம் தேதிக்கு (4,743) பின்னரான நான்கு மாதத்தில்,இன்று குறைவான புதிய தொற்றுக்கள் பதிவாகி இருப்பது பகுறிப்பிடத்தக்கது.

இதுவரை பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19 தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 2,436,498 ஆக உள்ளது என்று அவர் கூறினார்.

இன்று 7,414 பேர் குணமடைந்திருப்பதாகவும், இதுவரை சிகிச்சையின் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களது மொத்த எண்ணிக்கை 2,334,783 ஆக உள்ளதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் 607 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் 514 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 93 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 300 நோயாளிகளுக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது , அவர்களில் 217 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 83 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று தொற்றுக்குள்ளானவர்களில் 4,575 மலேசியர்கள் மற்றும் 192 வெளிநாட்டவர்கள் அடங்கிய 4,767 உள்ளூர் தொற்றுக்கள் இருந்தன. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 தொற்றுக்களும் இருந்தன.

புதிய நோய்த்தொற்றுகளில், 2.0 விழுக்காடு மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன எனவும் நூர் ஹிஷாம் கூறினார்.

நாட்டின் கோவிட் -19 தொற்று விகிதம் (R0, அல்லது R-nott) 0.88 ஆக  இருக்கிறது. கோலாலம்பூர் மிக உயர்ந்த அளவு R-nought 1.00 ஐக் கொண்டுள்ளது.

மேலும், நெகிரி செம்பிலான் 1.00 கொண்டுள்ளது. வேறு எந்த மாநிலமும் R-nought 1 க்கு மேல் பதிவு செய்யப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here