செபராங் ஜெயா, நவம்பர் 22 :
கடந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் மொத்தம் 1,696 தீயணைப்பு வீரர்கள் கோவிட் -19 சோதனைக்கு நேர்மறையான பதிலை பதிவு செய்துள்ளதுடன் மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
இரண்டு இறப்புகளில், ஒன்று சபாவைச் சேர்ந்த மூத்த அதிகாரியை உள்ளடக்கியது, மற்றொன்று நெகிரி செம்பிலானில் உள்ள தீயணைப்பு வீரர் சம்பந்தப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ முஹமட் ஹம்தான் வாஹிட் இதுபற்றிக் கூறுகையில், தற்போது, மொத்தம் 68 தீயணைப்பு வீரர்கள் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மற்றவர்கள் கோவிட்-19 மருத்துவமனைகளிலும், ஏனையோர் மலேசியா அக்ரோ எக்ஸ்போசிஷன் பார்க், செர்டாங்கில் (MAEPS) உள்ள இடர் சிகிச்சை மையத்தில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றார்.
“அவர்கள் அனைவரும் சமூகத்திலிருந்தே இந்த கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாறாக தீயணைப்பு நிலையங்களிலிருந்து அல்ல. நாங்கள் தினமும் நிலைமையை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று அவர் இன்று தி லைட் ஹோட்டலில் (The Light Hotel) செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
இன்று மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு நீண்ட சேவை விருதுகள், சிறப்பு விருதுகள் மற்றும் Pingat Kebesaran Jabatan ஆகியவற்றை வழங்குவதற்காக அவர் இங்கு வந்திருந்தார்.
இந்த நிகழ்வில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சாடன் மொக்தாரும் உடனிருந்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து 14,500 தீயணைப்பு வீரர்களும் பூஸ்டர் டோஸ்களைப் பெறுவதை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதி செய்யும் என்று ஹம்தான் கூறினார்.
“தற்போது, அவர்களில் 26 விழுக்காட்டினாரே பூஸ்டர் டோஸ்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் கடமையில் அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் எதிர்கொள்வதால், அவர்கள் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்ய, பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் ” என்று அவர் மேலும் கூறினார்.