கோலாலம்பூர், டிசம்பர் 8 :
அமான் புத்ரா மக்கள் வீட்டுத் திட்டத்திற்கு (PPR) அருகில் உள்ள ஜாலான் அமான் புத்ரா 1, ஜிஞ்ஜாங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் மற்றும் 5 வாகனங்கள் எரிந்து நாசமாகின.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு தளபதி முகமட் இக்பால் ஜகாரியா கூறுகையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்திற்கு இன்று காலை 10.38 மணிக்கு சம்பவம் குறித்து அழைப்பு வந்தது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனே, ஜிஞ்ஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், செந்தூல், ஹாங் துவா மற்றும் கோம்பாக் செலாத்தான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 38 உறுப்பினர்களைக் கொண்ட நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றார்.
“கார் பட்டறை, கார் நிறப்பூச்சு பட்டறை, மோட்டார் சைக்கிள் பட்டறை, மரச்சாமான்கள் விற்கும் கடை, பயன்படுத்திய பொருட்கள் விற்கும் கடை மற்றும் அலுவலகங்கள் அடங்கிய அரை நிரந்தரக் கடைகளின் ஏழு அலகுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
மேலும், பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து, அவற்றை பரவாமல் கட்டுப்படுத்தினர்.
“காலை 11.04 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 11.53 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இத்தீ விபத்தின் மொத்த அழிவு கிட்டத்தட்ட 80 விழுக்காடு எரிந்து நாசமாகியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
எவ்வாறாயினும், இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.