கினாபடங்கானில் விரைவுப் பேருந்து விபத்து: 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சபா, கினாபடங்கன் (Kinabatangan) அருகே இன்று நிகழ்ந்த ஒரு பெரும் பேருந்து விபத்தில், ஓட்டுநர் உட்பட 40 பேர் எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர்.

கோத்தா கினபாலுவிலிருந்து சாண்டக்கான் (Sandakan) நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்து, இன்று முற்பகல் 11:40 மணியளவில் கம்போங் பாரிஸ் 2 (Kampung Paris 2) அருகே விபத்துக்குள்ளானது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி. ரவி இது குறித்துத் தெரிவிக்கையில்: சாலையின் இடதுபுறத்தில் இருந்த ஒரு சந்திப்பிலிருந்து திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தைத் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளின் எண் அல்லது விவரங்களை ஓட்டுநரால் அடையாளம் காண முடியவில்லை. எனினும், பேருந்திலிருந்த 39 பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகிய 40 பேரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here