கோத்தா கினாபாலு, டிசம்பர் 13 :
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த, 58 வயதான நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த, சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகளை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீட்டுக்கு எதிராக, அரசு தரப்பு அதை நிராகரித்து குறுக்கு மேல்முறையீட்டை செய்ததை தொடர்ந்து, நீதித்துறை ஆணையர் அமலாத்தி பார்னெல் இந்த தீர்ப்பை உறுதி செய்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார், அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று அவருக்கு எதிராக அரசுத் தரப்பு குறுக்கு மேல்முறையீடு செய்தது.
நீதிபதி அமலாத்தி தனது தீர்ப்பில், “செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் தலையிடுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.
“அவர் (விசாரணை நீதிபதி) அனைத்து விஷயங்களையும் கவனமாக கூறியதுடன் குற்றவாளி தரப்பின் தற்காப்பையும் மதிப்பீடு செய்த அவர், இந்த தண்டனை பாதுகாப்பானது, எனவே நான் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன்,” என்று கூறினார், அத்தோடு செஷன்ஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தார் .
எவ்வாறாயினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பு மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதற்காக, குற்றஞ்சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை நீதிபதி அமலாத்தி அனுமதித்தார்.
முழு விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் 27, 2019 அன்று அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
நவம்பர் 19, 2017 அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, இனானாம், கோலாம்போங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது அண்டை வீட்டு ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எல்சி ப்ரிமஸ் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரு பிரம்படிகளையும் இரண்டு குற்றங்களுக்காகவும் விதித்தார். இருப்பினும், இத்தண்டனை ஒரே நேரத்தில் வழங்கப்படும்.
இரண்டு குற்றச்சாட்டுகளும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் வழங்க வழிவகுக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர்கள் ராம் சிங், கிம்பர்லி யே மற்றும் சென் வென் ஜே ஆகியோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.




















