கோலாலம்பூர், டிசம்பர் 13 :
டிசம்பர் 6 ஆம் தேதி வரை, கோவிட்-19 சிறப்பு உதவிக்கான மொத்தம் 65,189 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் RM28.6 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய 22,336 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள 55,184 இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் துறையின் (சிறப்புப் பணிகள்) துணை அமைச்சர் டத்தோ மஸ்துரா முகமட் யாசிட் தெரிவித்தார்.
மேலும் கோவிட்-19 இறப்பு நிர்வாகத்தின் சிறப்பு உதவியின் கீழ்,RM56.8 மில்லியன் ஒதுக்கீட்டில் 11,816 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) கோவிட்-19 நிதியைப் பயன்படுத்துவதால், இந்த உதவிக்காக 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு ஒதுக்கீடு எதுவும் இல்லை, இருந்த போதிலும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள், கார்ப்பரேட் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களின் பங்களிப்பு மிகவும் உறுதுணையாக உள்ளது,” என்று இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி-பதில் அமர்வவின் போது தெரிவித்தார்.
NADMA இன் கீழ் கோவிட் 19 சிறப்பு உதவி மற்றும் கோவிட்-19 மேலாண்மை உதவிக்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்களை அறிய விரும்பி கூ போய் தியோங்கின் (PH-கோத்தா மலாக்கா) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கோவிட் -19 புதிய அலை ஏற்பட்டால், சிறப்பு உதவியை வழங்க NADMA கோவிட் -19 நிதி போதுமானதாக இல்லாவிட்டால், அரசாங்கம் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று மஸ்துரா கூறினார்.
இன்றைய நிலவரப்படி, அரசாங்கம் கோவிட்-19 ஆரம்ப நிதி உதவியாக RM61 மில்லியனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா




















