பிள்ளைகளை கட்டாயப்படுத்தி விடுதிப் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம்; மாரா தலைவர் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லையெனில், அவர்களை ‘மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரி’ (MRSM) உள்ளிட்ட எந்தவொரு விடுதிப் பள்ளிகளிலும் (Boarding Schools) சேருமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாரா (Majlis Amanah Rakyat – MARA) அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

இத்தகைய கட்டாயப்படுத்துதல் பிள்ளைகளின் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வையும் அவர்களின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

“பிள்ளைகளுக்கு விடுதிப் பள்ளிகளில், குறிப்பாக MRSM-இல் சேர ஆர்வம் இல்லை என்றால் அவர்களை வற்புறுத்த வேண்டாம். அது அவர்களின் உணர்வுகளைப் பாதித்து, அவர்களுக்குள் ஒருவித கிளர்ச்சி மனப்பான்மையைத் தூண்டிவிடும். இது காலப்போக்கில் அவர்களின் தவறான நடத்தைக்கு வழிவகுத்துவிடக் கூடும்” என்று, அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அஷ்ரப் வாஜ்டி பேசுகையில், ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) முன்னாள் இராணுவத்தினரை முழுநேர வார்டன்களாக நியமித்த பிறகு, பெசுட் (Besut) மற்றும் பாலிக் பூலாவ் (Balik Pulau) MRSM வளாகங்களில் மாணவர்களின் ஒழுங்கீனப் பிரச்சினைகளும், வம்புசெய்தல் (Bullying) சம்பவங்களும் பெருமளவில் குறைந்து, கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த வார்டன் நியமனத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து 58 MRSM கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here