அலோர் ஸ்டார், டிசம்பர் 14 :
கெடாவின் பண்டார் பாரு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மேலும் இரண்டு குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று 21 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 23 ஆக அதிகரித்துள்ளது என்று பண்டார் பாரு பேரிடர் மேலாண்மைக் குழு செயலாக்க அதிகாரி லெப்டினன்ட் (PA) அப்துல் ரஹீம் கைருடின் கூறினார்.
வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் முக்கிம் பாகன் சமாக்கைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நேற்று இரவு 8 மணிக்கு திறக்கப்பட்ட செக்கோலா கேபாங்சான் சுங்கை கெச்சில் உலுவில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தற்போது, வெள்ள நீர் வடிந்துள்ளது, இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு, மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் உறுப்பினர்கள் உதவுவார்கள் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, கம்போங் பாரிட் நிபோங், கம்போங் ஆசாம் கும்பாங் மற்றும் தாமான் சகாய நிலம் உள்ளிட்ட பல கிராமங்களையும், சுங்கை தெபுஸ் பகுதியில் உள்ள பகுதிகளையும் வெள்ளம் பாதித்துள்ளது என்றார்.
-பெர்னாமா