பட்டர்வொர்த், ஜனவரி 6 :
கால்நடைத் துறையின் அனுமதியின்றி நான்கு பன்றிகளை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுநருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000வெள்ளி அபராதம் விதித்ததுடன், அவர் அபராதத்தை செலுத்த தவறினால் நான்கு மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி தான் ஜி சுவான் (22) என்பவருக்கு நீதிபதி எம்.கலையரசி இந்த அபராதத்தை விதித்தார்.
மேலும், பன்றிகளை விற்றதன் மூலம் கிடைத்த தொகையான 1,200 வெள்ளியை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கால்நடை ஆணையம் அல்லது மாநில கால்நடை இயக்குநரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி PFH5339 என்ற பதிவு எண் கொண்ட லோரியைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று, செபெராங் பிறை உதாரா மாவட்டத்தில் உள்ள ஹை-குட் கார்ப்பரேஷன் Sdn Bhdயிலிருந்து, கம்போங் செலாமாட் தாசேக் கேழுகோரில் உள்ள இறைச்சிக் கூடத்திற்கு, விலங்கைக் கொண்டு சென்றதாக தான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விலங்குகள் சட்டம் 1953 இன் உட்பிரிவு 36(1)(c)(i) இன் கீழ் ஆணை 4 (1)(a) விலங்குகள் (கால் மற்றும் வாய் நோய் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு) ஆணை 2003 இன் கீழ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட்து. இது அதிகபட்ச தண்டனையாக RM15,000 வரை அபராதம் விதிக்க வழிசெய்கிறது.
குற்றவாளியின் தணிக்கையின் போது, வழக்கறிஞரால் பிரதிநிதித்துவம் செய்யப்படாத தான், தனது வாழ்வாதாரமான லோரியை திரும்ப தருமாறு நீதிமன்றத்திடம் கோரினார், அபராதம் செலுத்திய பிறகு லோரியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.
மாநில கால்நடை மருத்துவ சேவைகள் துறையின் வழக்கு விசாரணை அதிகாரி ரோசிமன் அவாங் தஹ்ரின் இந்த வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.