நடிகர் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவின் 39ஆவது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு – பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது. ஜெய்பீம் படத்தைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. அமேசான் பிரைம்வீடியோஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் மொழி, மாநில எல்லைகளை கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் மக்கள் முன் ஜெய் பீம் திரையிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.