சுங்கைப் பட்டாணி, ஜனவரி 29 :
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ வாங்கில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் (பெட்ரோல் பங்கில்) நடந்த கொள்ளைச் சம்பவத்தில், மழுங்கிப்போன இரும்புடன் ஆயுதம் ஏந்திய ஒருவர், அங்கிருந்து RM900 ரொக்கப்பணத்தை கொள்ளையடித்த செயல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அந்த எரிப்பொருள் நிரப்பும் நிலைய ஊழியர் ஒருவர் வளாகத்தை திறப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த வேளையில், சந்தேக நபர் இந்தச் செயலைச் செய்துள்ளார்.
கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அட்லி அபு ஷா இதுபற்றிக் கூறுகையில், கொள்ளை நடந்த நேரத்தில், 57 வயதான தொழிலாளி பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்துள்ளார்.
அவர் கூறியபடி, இரும்புடன் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர், எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தின் வளாகத்திற்குள் விரைந்து வந்து, பணத்தை ஒப்படைக்குமாறு அந்தப் பணியாளரைக் கட்டளையிட்டார்.
“காயம் ஏற்படும் எனக் கவலைப்பட்ட அந்த ஊழியர் RM900 ரொக்கம் கொண்ட கல்லாப்பெட்டியைக் சந்தேக நபரிடம் கொடுத்தார், அதை எடுத்துக்கொண்டு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார்.
“சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த சந்தேக நபரின் முகத்தை அவரால் அடையாளம் காண முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமராவின் (CCTV) காட்சிகளின் முடிவுகளின் அடிப்படையில், சந்தேக நபர் 165 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் என்றும், தோல் நிற ஜீன்ஸ் மற்றும் ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்திருப்பதும் கண்டறியப்பட்டது.
“சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர், மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 392/397 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.