சிரம்பான், பிப்ரவரி 6 :
வார இறுதியில் தலைநகர் வரையுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) ‘சூப்பர்மேன்’ ஸ்டண்ட் செய்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களின் 13 ஓட்டுநர்களின் சாகசம், போலீஸ் தடுப்புக் காவலில் முடிந்தது.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) செயல்பாட்டு புலனாய்வுப் பிரிவு (RO) நடத்திய தெருக் கும்பல் மீதான சிறப்பு நடவடிக்கையின் மூலம், 16 முதல் 28 வயதுடைய மொத்தம் 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் JSPT துணை இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஹுசைன் கூறுகையில், இரு குழுக்களும் முறையே நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் (KM) 262 முதல் 268 மற்றும் KM 257 முதல் 263 வரை குற்றங்களைச் செய்வது கண்டறியப்பட்டது.
“RO பிரிவினரின் நெடுஞ்சாலை கண்காணிப்பின் அடிப்படையில், 8 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சூப்பர்மேன் (சாகசம்) செய்து ஒருவருக்கொருவர் போட்டியிடுவதைக் கண்டறிந்தனர்.
“பிளஸ் நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் 262 ஆவது கிலோமீட்டரிலிருந்து 268 கிலோமீட்டர் வரையிலான பகுதியில், இந்த குற்றம் கண்டறியப்பட்டதும் RO யூனிட் அனைத்து ஓட்டுனர்களையும் பின்தொடர்ந்து அவர்களில் 6 பேரை ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மற்றொரு பெட்ரோல் நிலையத்தில் மேலும் 2 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் , மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குழு சூப்பர்மேன் ஸ்டண்ட் , ஜிக்-ஜாக்கிங் செய்து, ஒருவருக்கொருவர் போட்டியிட்டு, மற்றும் KM 257 முதல் 263 வரை இக்குற்றங்களை செய்தது கண்டறியப்பட்டது.
“அந்தக்குழுவையும் பின்தொடர்ந்த RO பிரிவினர், அதிகாலை 1.25 மணிக்கு கோலாலம்பூர், சுங்கை பீசி நெடுஞ்சாலை, தொழில்நுட்ப பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர்களை நிறுத்திய பின்னர், “தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட எங்கள் உறுப்பினர்கள் 5 சந்தேக நபர்களை கைது செய்தனர்,” என்று அவர் கூறினார்.





















