கீவ், மார்ச் 2:
உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போரில் மூன்றாவது நாடாக, அண்டை நாடான பெலாரசும் களத்தில் குதித்ததாக தகவல் வெளியானது. பெலாரஸ் படைகள் உக்ரைன் நாட்டின் வட பகுதி வழியாக நேற்று நுழைந்ததாக உக்ரைன் வடக்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் விட்டலி கிரிலோவ் தெரிவித்தார்.
ரஷிய படைகளுக்கு ஆதரவாக உக்ரைனின் செர்னிஹிவ் நகருக்குள் பெலாரஸ் படைகள் நுழைந்து இருப்பதை உக்ரைன் நாடாளுமன்றமும் உறுதி செய்தது. ஆனால் அதை பெலாரஸ் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. உக்ரைனில் ரஷியாவின் போர் நடவடிக்கையில் சேரும் திட்டம் ஏதும் இல்லை என்று பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ உறுதி அளித்துள்ளார்.