மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் புதிய சாதனை! 290 மில்லியன் பயணிகள் வருகை; 121 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டி புள்ளிவிவரத் துறை அதிரடி அறிக்கை!

கோலாலம்பூர்:

மலேசியாவின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறை (Domestic Tourism), கடந்த 2025-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வலுவானதொரு வளர்ச்சிப் பாதையைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

மலேசியப் புள்ளிவிவரத் துறை (DOSM) இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ‘2025-ஆம் ஆண்டுக்கான உள்நாட்டுச் சுற்றுலா ஆய்வு அறிக்கையின்படி’, உள்நாட்டுப் பயணிகளின் ஒட்டுமொத்தச் செலவினம், கடந்த 2024-ஆம் ஆண்டில் இருந்த RM106.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 13.6 விழுக்காடு அசுர வளர்ச்சி கண்டு RM121.3 பில்லியனாக உயர்ந்துள்ளது.

நாட்டின் தலைமைப் புள்ளியியலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உசிர் மஹிதின் இதுகுறித்து விடுத்துள்ள செய்தி அறிக்கையில் விவரிப்பதாவது: “உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் (Tourists) மற்றும் குறுகிய கால உல்லாசப் பயணிகள் (Excursionists) ஆகிய இரு தரப்பினரின் செலவினமும் முறையே 14.6% மற்றும் 12.2% வளர்ச்சி கண்டதே இந்த வருவாய் உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும். ஒட்டுமொத்த உள்நாட்டுச் சுற்றுலாச் செலவினத்தில், தங்கிப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளே 59.5 விழுக்காடு பங்களிப்புடன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.”

இந்த அபரிமிதமான வருவாய் வளர்ச்சியானது, நாட்டின் உள்நாட்டுப் பயண நடவடிக்கைகளின் அதிகரிப்போடு நேரடியாக ஒத்துப்போகிறது. 2024-ஆம் ஆண்டில் 260.1 மில்லியனாக இருந்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 2025-இல் 11.5 விழுக்காடு அதிகரித்து 290.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், பயணிகள் தங்களது சுற்றுலாத் தலங்களில் தங்கும் சராசரி கால அளவும் (Average Length of Stay) 2.49 இரவுகளிலிருந்து 2.56 இரவுகளாகச் சற்று அதிகரித்துள்ளது. மலேசியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே நீண்ட நாட்கள் தங்கிச் சுற்றுலாவை ரசிப்பதில் காட்டும் அார்வத்தை இது காட்டுவதாக டாக்டர் முகமது உசிர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பன்முகக் கலாச்சாரப் பண்டிகைகளான சீனப் புத்தாண்டு, ஹரி ராயா நோன்புப் பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் பள்ளி விடுமுறைக் காலங்களில் ஏற்பட்ட அதீத பயணத் தேவையே இத்துறையின் இந்த அசுர வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.

இதுதவிர, கடந்த ஆண்டில் மலேசியாவில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட சர்வதேச இசை நிகழ்ச்சிகள், கலைத் திருவிழாக்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளூர் பயணங்களை வெகுவாக ஊக்குவித்தன. அதே நேரத்தில், மலேசியா பல்வேறு ஆசியான் (ASEAN) மாநாடுகள் மற்றும் அது தொடர்பான அதிகாரபூர்வ நிகழ்வுகளைத் நாடு தழுவிய அளவில் நடத்தியதும், வணிகம் சார்ந்த உள்நாட்டுப் பயணங்கள் பெருகுவதற்குக் காரணியாக அமைந்தது.

மேலும், பயண முறைகளைப் பொறுத்தமட்டில், மலேசியர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் பொதுப் பேருந்துகள் உள்ளிட்ட தரைவழிப் போக்குவரத்தையே (Land Transport) முதன்மையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பயணங்களில் 97.5 விழுக்காடு தரைவழிப் பயணங்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here