ஈப்போ, மார்ச் 8:
இன்று இங்குள்ள சிம்பாங் பூலாய், கெராமாட் பூலாயில் உள்ள ஒரு குவாரியில் கல் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூன்று பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர், மற்றொருவரைக் காணவில்லை. காணாமல் போனவர் கற்பாறைகளுக்குள் புதையுண்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், இன்று காலை 9.40 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததையடுத்து, சிம்பாங் பூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவித்தார்.
“இடத்திற்கு வந்தவுடன், நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்களில் இருவரால் காயமின்றி தப்பிக்க முடிந்தது, ஒருவர் பலத்த காயமடைந்தார், மற்றொருவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
“குவாரியின் இடிபாடுகளில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படும் பாதிக்கப்பட்டவரை தேடும் பணியில் மலேசிய சிறப்பு நடவடிக்கைகள், தந்திரோபாய மற்றும் மீட்புக் குழுவும் (STORM) தற்போது மீட்பு நடவடிக்கையில் இணைந்துள்ளது ,” என்று அவர் கூறினார்.