பொந்தியான், மார்ச் 10:
மலேசியாவின் அனைத்துலக எல்லைகள் ஏப்ரல் முதல் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், சிங்கப்பூருக்குத் தினசரி செல்லும் மலேசியர்களுக்கான எஸ்ஓபி விதிமுறைகளை புத்ராஜெயா விரைந்து நிர்ணயிக்க வேண்டும் என்று ஜோகூர் காபந்து மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் வலியுறுத்தினார்.
எல்லை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்பதாக அவர் சொன்னார். எல்லைகள் மூடப்பட்டதால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலா போன்ற பொருளாதாரத் துறைகளுக்கு இந்நடவடிக்கை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் சொன்னார்.
ஆகவே சிங்கப்பூருக்குத் தினசரி பயணம் செய்வோருக்கான எஸ்ஓபி விதிமுறைகளை மத்திய அரசு விரைந்து நிர்ணயிக்க வேண்டும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது என்று அவர் சொன்னார். மார்ச் 12இல் நடைபெறும் ஜோகூர் தேர்தலில் ஹஸ்னி தனது பெனுட் தொகுதியைத் தற்காத்துப் போட்டியிடுகின்றார்.
சிங்கப்பூரும் இதேபோல தனது எல்லையை மீண்டும் திறக்க வேண்டும். இதன்மூலம் ஜோகூர் மக்கள் தினசரி சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து வீடு திரும்புவதற்கான வங்தி ஏற்படும் என்று ஹஸ்னி சொன்னார்.