அலோர் ஸ்டார், மார்ச் 20 :
லோரி மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய சாலை விபத்தில், ஓய்வு பெற்ற போலீஸ்காரரும் அவரது மனைவியும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.
கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையாளர் அஹ்மட் சுச்ரி பாய் இதுபற்றிக் கூறுகையில், இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்தது என்றும், பாதிக்கப்பட்டவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான ஜோஹரி சே சாட், 59, மற்றும் அவரது மனைவி லத்திபா முகமட், 55 ஆகியோர் பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தனர்.
“இந்த சம்பவத்தின் போது, லோரியை சாலையிலிருந்து பின்னோக்கி ஓட்டும்போது, இவ்விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் அப்போது லோரி ஓட்டுநரின் உதவியாளரான 61 வயதானவர் போக்குவரத்தை கண்காணித்தார் என கூறப்படுகிறது.
“எனினும், உயிரிழந்த ஜோடி மோட்டார் சைக்கிளில் நேராக வந்த போது, இடது புறம் இருந்து வந்த லோரியை தவிர்க்க போதுமான நேரம் கிடைக்கவில்லை ,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.
“உயிரிழந்த தம்பதியினரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனையில் (HSB) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
இவ் வழக்கு “சாலை போக்குவரத்து சட்டம் 1987 ஆம் ஆண்டின் பிரிவு 41 (1) கீழ் விசாரணை செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.









