யோங் பெங், மார்ச் 31 :
வியாழன் (மார்ச் 31) அதிகாலை யோங் பெங் பொதுச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வணிகர்கள் உடனடி நிதி உதவியாக தலா RM1,000 பெறுவார்கள் என்று ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.
இங்குள்ள ஜாலான் டெம்பிளரில் உள்ள சந்தை கட்டிடத்தில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் 70% தீயில் எரிந்து நாசமானது என ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன” என்று டாக்டர் வீ வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 17 வர்த்தகர்களுக்கு தலா RM1,000 வழங்குமாறு யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் லிங் தியான் சூனுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர், தானும், மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவருமான லிங்கும், யோங் பெங் மாவட்டக் கவுன்சிலுடன் சுமார் 70% தீயில் நாசமான சந்தையை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் சரிசெய்வது குறித்து விவாதிப்பதாகக் கூறினார்.