சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்தும் ரஷ்ய வீரர்கள்- இங்கிலாந்து உளவுத்துறை

லண்டன், மார்ச் 31 :

உக்ரைன் மீது ரஷ்யா 36-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

ரஷ்ய வீரர்கள் சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ஜெர்மி பிளமிங் கூறுகையில், உக்ரைன் மக்களின் எதிர்ப்பை ரஷ்ய அதிபர் புதின் தவறாக கணித்துவிட்டார். போரால் விதிக்கப்படும் பொருளாதார தடைகளின் விளைவுகளை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். மேலும், தனது இராணுவத்தின் திறனை உயர்த்தி மதிப்பிட்டு உக்ரைன் போரில் விரைவில் வெற்றிபெற்றுவிடுவோம் என அவர் கணித்துள்ளார்.

மன வலிமையின்றி, போதிய ஆயுதங்கள் இன்று உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் ரஷ்ய வீரர்கள் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். ரஷ்ய வீரர்கள் தங்கள் சொந்த ஆயுதங்களையே அழிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரஷ்ய வீரர்கள் தவறுதலாக தங்கள் சொந்த போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துகின்றனர்.

அதேவேளை, உக்ரைன் மீதான போரை தவறாக கணித்துவிட்டோம் என்பதையும், அதன் தற்போதைய நிலையையும் ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகர்கள் அவரிடம் (புதினிடம்) தெரிவிக்க பயப்படுகின்றனர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here