கோத்தா பாரு, மே 5 :
வருகின்ற ஜூன் மாதத்தில் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளும் மொத்தம் 2,600 ஒப்பந்த சேவை (COS) ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்றும் அவர்களின் ஒப்பந்தங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
கல்வி அமைச்சுக்கும் கல்விச் சேவைகள் ஆணைக்குழுவிற்கும் (SPP) இடையிலான கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பின்னர், இந்த விஷயம் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
எனவே, இந்த மே மாதம் சம்பளம் கிடைக்காது என்ற வதந்தி உள்ளிட்ட பல வதந்திகள் குறித்து ஆசிரியர் குழு கவலைப்பட வேண்டியதில்லை.
“இந்தப் பிரச்சினைக்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இன்று கேத்தரேயில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த, ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.