செப்பாங், மே 28 :
இன்று காலை, பூச்சோங்கை நோக்கிச் செல்லும் பெர்சியாரான் உத்தாமாவின் 37.9 ஆவது கிலோமீட்டரில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதியதில் 29 வயது இளைஞன் உயிரிழந்தார்.
காலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், உள் காயங்கள் காரணமாக, அந்த கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
செப்பாங் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் நூர் அஹ்வான் முகமட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் வீடு திரும்புவதற்காக சைபர்ஜெயாவிலிருந்து புச்சோங் நோக்கிச் சென்றது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவரது கார் சறுக்கி, புத்ராஜெயாவுக்கு வெளியேறும் பாதைக்கும் புச்சோங்கிற்கான சாலைக்கும் இடையே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதாக நம்பப்படுகிறது.
“காரில் சிக்கிய ஓட்டுநரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, தீயணைப்பு படையினரின் உதவியுடன் அவர் காரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.