ராஜினாமா செய்தார் கோத்தபயா… ராஜபக்‌சே குடும்பத்தை அதிகாரத்திலிருந்து துடைத்தெறிந்த இலங்கை மக்கள்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் புரட்சியில் இறங்கிய இலங்கை மக்களை தாக்குபிடிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற அதிபர் கோத்தபயா ராஜபக்‌சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

பொருளாதார சிக்கல்

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்‌சே தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

போராட்டம்

இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார்.

அதிபர் மாளிகை

இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதிபர் கோத்தாபய ராஜபக்‌சேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோத்தாபய ராஜபக்‌சே அங்கிருந்து தப்பி ஓடினார்.

ரணில் ராஜினாமா

அதேநாளில் ரணில் விக்கிரமசிங்கே பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் வீட்டின் முன் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. போலீஸ் பாதுகாப்பை மீறி ரணிலின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை தீ வைத்து எரித்தனர்.

வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

கோத்தாபய ராஜபக்சே எங்கு சென்றார் என்ற தகவலே தெரியாத நிலையில் பலரும் அவர் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இடத்தில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அவர், மக்களின் எழுச்சி காரணமாக இலங்கையைவிட்டு மாலத்தீவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. புதன்கிழமை அவர் இலங்கை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிங்கப்பூரில் கோத்தாபய

கோத்தபயா ராஜபக்‌சே மாலத்தீவில் இருப்பதை அறிந்து அந்நாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள் அவரை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாலத்தீவிலும் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் அவர் சிங்கப்பூருக்கு விமான மூலம் தப்பிச்செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலத்தீவிலிருந்து அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருக்கு தாங்கம் அடைக்கலம் வழங்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை விளக்கம் தந்தது.

கோத்தபயா ராஜினாமா

சிங்கப்பூர் சென்றவுடன் கோத்தபயா ராஜபக்‌சே ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சபாநாயகர் இந்த ராஜினாமா கடிதத்தை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ராஜபக்சே குடும்பம் இலங்கையின் அதிகாரத்திலிருந்து துடைத்து எரியப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here