‘பருத்திவீரன்’ படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட பெரிய கொடுமையை அமீருக்கு செய்திருப்பதாக இயக்குநர் நந்தா பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து தயாரிப்பாளராகத் தன்னை ஏமாற்றி விட்டதாக ஞானவேல்ராஜா பேட்டி கொடுக்க, இதற்கு தன் சொந்த பணத்தைப் போட்டு இந்தப் பிரச்சினையால் படம் எடுத்ததாக அமீர் விளக்கம் கொடுத்தார். அத்துடன் உண்மை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன், பாரதிராஜா எனப் பலரும் அமீருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘மாத்தியோசி’ படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’பருத்திவீரன்’ படத்தில் முத்தழகுக்கு நடந்த கொடுமையைவிட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தி இருக்கிறார்கள். கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படி அல்ல. அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார்.
படைக்கு அஞ்சாத அவருக்கு கை கொடுக்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம். தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கு அருள்கின்ற அவர் புன்னகை என்றும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்திவீரர்களை அவர் தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் துணை நிற்போம்’ எனக் கூறியுள்ளார்.