ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் பார்ட்டி ஒன்றின் போது திடீரென நீச்சல் குளத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மி யோசெப் நகரில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு பார்ட்டி ஒன்றை நடத்தி உள்ளது.
பார்ட்டி
அங்கு பார்ட்டியில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சில் செய்து கொண்டு இருந்துள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்க அங்குப் பலரும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். அந்தச் சமயத்தில் நீச்சல் குளத்தில் திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. அது நீச்சல் குளத்தில் இருந்த நீரில் இருந்து அனைத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளது. இது அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உயிரிழப்பு
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் நீச்சல் குளத்தில் இருந்து ஒரு ஊழியர் காயமடைந்து உள்ளார். 34 வயதான அந்த நபர் பள்ளத்திற்கு இழுக்கப்பட்டாலும் கூட எப்படியோ சிறு காயங்கள் உடன் தப்பிவிட்டார். இருப்பினும், மற்றொரு நபரால் தப்ப முடியவில்லை. அவர் அந்தப் பள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்க்ஹோல் ஏன்
சிங்க்ஹோல் எனப்படும் பள்ளங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். நிலத்திற்கு அடியே இருக்கும் மண் நீரில் கரைந்துவிடும். அப்போது மெல்லிய அடுக்கு மட்டுமே இருக்கும். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இதுபோன்ற சிங்க்ஹோல்கள் ஏற்படலாம். சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகள் இருக்கும் இடங்களில் சிங்க்ஹோல்கள் அதிகம் ஏற்படும். அதேபோல இயற்கையாக நீர் செல்லும் முறைகளை மனிதர்கள் மாற்றியமைக்கும் போதும் சிங்ஹோல்கள் ஏற்படும்.