உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியது. இந்த நோய் பரவலுக்கு தடுப்பூசி போன்ற மருந்துகள் கண்டுபிடிக்க சுமார் ஓராண்டு ஆன நிலையில், இதை தடுக்கும் முக்கிய ஆயுதமாக முக கவசம் தான் இருந்து வருகிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் காலத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கின.
ஆனால் இந்த முகக்கவச விதிகளை பின்பற்றாமல் வேண்டும் என்றே சிலர் முக்கவசத்திற்கு எதிரான பரப்புரை மேற்கொள்வதை கொண்டுள்ளனர். இந்த வீண் வீம்பு விபரீதத்தில் முடிந்த கதை ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது.ஜெர்மனியில் உள்ள இடார் என்ற நகரில், கடந்தாண்டு செப்டெம்பரில் 50 வயது மதிக்கத்தக்க மரியோ என்ற நபர் கடை ஒன்றுக்கு பீர் வாங்க வந்துள்ளார். இவர் முகக்கவசத்திற்கு எதிரானவர் ஆவார்.
இவர் கடைக்குள் முகக்கவசம் இல்லாமல் நுழைந்த நிலையில் அங்கு வேலை பார்த்த 20 வயதான அலெக்ஸ் என்ற மாணவர் கடைக்குள் முகக்கவசம் கட்டாயம் என்றுள்ளார். அதற்கு இவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, கடைக்கு வந்த மரியோ தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடையில் வேலை பார்த்த அலெக்ஸை சுட்டுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே அலெக்ஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பின்னர் இந்த கொலை சம்பவம் நடந்த அடுத்த நாளே மரியோ காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கொலை செய்த மரியோவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரியோவுக்கு இந்த முகக்கவசம் கட்டுப்பாடு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல்வாதிகள் மீதான இந்த ஆத்திரம் வருந்தத்தக்க வகையில் ஒரு இளைஞரிடம் காட்டப்பட்டு அவரின் உயிருக்கே கேடாய் முடிந்துள்ளதாக இந்த வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















