பேங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவரை கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரி குறித்த பரபரப்பு பின்னணி கிடைத்துள்ளது. தாய்லாந்தில் ஏராளமான பகல் நேர குழந்தைகள் நல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெற்றோர்கள் இந்த பகல் நேர குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தைகளை விட்டுச் செல்வது வழக்கம். அதேபோல் தாய்லாந்தின் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர். தாக்குதல் அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர்.
இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது. இதில் 22 பேர் குழந்தைகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்த 22 குழந்தைகளும் 2 வயதுக்கும் குறைவானவர்கள். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கடைசியில் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
துப்பாக்கிச்சூடு நடத்திவர் குறித்து விசாரித்தபோது அவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. அவரது பெயர் பன்யா கம்ராப் என்றும், கடந்த ஆண்டு போலீஸ் பணியிலிருந்து விலகினார் என்பது தெரியவந்துல்ளது. கம்ராப் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “கொலையாளி மதிய உணவருந்தும் நேரத்தில் உள்ளே புகுந்தார். குழந்தைகள் காப்பகத்தில் 4-5 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 8 மாத கர்ப்பிணியான ஆசிரியரும் கொல்லப்பட்டார். தொடக்கத்தில் வெடி விபத்து என்றே மக்கள் கருதினர்.
கொலையாளி துப்பாக்கி மற்றும் கத்தியுடன் குழந்தைகளின் அறைக்குள் சென்றான். அங்கு குழந்தைகள் சில உறங்கிக் கொண்டிருந்தன. அவர்களை கத்தியால் குத்தி கம்ராப் கொலை செய்தான்.” என்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயமடைந்தனர்.