கம்போடியா மற்றும் லாவோஸில் மனித கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட மேலும் 21 மலேசியர்கள் அக்டோபர் 6 அன்று தாயகம் திரும்பினர். வெளிநாடுகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் மோசடி பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 401 பேரில் 273 பேரை அரசாங்கம் இப்போது மீட்க முடிந்தது என்றார். அந்த நாடுகளில் உள்ள குடிநுழைவு தடுப்பு மையங்களில் இன்னும் 60 பேரைத் தவிர பெரும்பாலானவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
இந்த சிக்கலைச் சமாளிக்கும் புதிய அரசாங்கக் குழுவின் தலைவரான சைபுதீன், மீதமுள்ள 128 பேரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், மலேசியர்கள் நாட்டிற்கு வெளியே எந்த வேலையும் எடுப்பதற்கு முன் கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“நவீன அடிமைத்தனம்” என்று அழைக்கப்படும் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள தாய்லாந்து மருத்துவமனையில் 23 வயதான மலேசியர் ஒருவர் மனித கடத்தல் திட்டத்திற்கு இரையாகி இறந்ததையடுத்து இந்த விவகாரம் மிகவும் கவனத்துரியதானது.
சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், காணாமல் போனதாகக் கூறப்படும் 401 பேர், இத்தகைய மோசடிகளில் சிக்கிய மலேசியர்களின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதியினர் மட்டுமே என்று நம்புகிறார்கள். ஆள் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படும் உள்ளூர் முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தவறான வேலை விளம்பரங்களைத் தடை செய்யவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
கம்போடியா அதிகாரிகள், சட்டவிரோத தொழிலாளர்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான சட்டவிரோத ஆன்லைன் திட்டங்களை கண்டுபிடித்துள்ளதாகவும், சீனா மற்றும் தைவானில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை ஈடுபாட்டிற்காக கைது செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். முக்கியமாக சீனாவைச் சேர்ந்த மோசடி செய்பவர்கள் கம்போடியாவை மிரட்டி பணம் பறிப்பதற்கான தளமாக பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கம்போடியாவைத் தவிர, மோசடி செய்பவர்கள் தாய்லாந்து எல்லைக்கு அருகில் லாவோஸ் மற்றும் மியான்மரில் தளங்களை அமைத்துள்ளதாக அறியப்படுகிறது.







