ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியமைத்த கடந்த 8 மாதங்களில் இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களுக்கான எந்த ஒதுக்கீட்டையும் DAP கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் எதிர்க்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“DAP கட்சியினர் மற்றும் (அதன் பொதுச்செயலாளர்) அந்தோனி லோக் தற்போது அமைச்சரவையில் உள்ளனர், இதுவரை இஸ்லாமுக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. உதாரணமாக ஃபெல்டா கடனில் பில்லியன் கணக்கான ரிங்கிட் தொகையை செலுத்துவதையோ அல்லது ஏழைகளுக்கு ஒதுக்குவதையோ அவர்கள் எதிர்க்கவில்லை,” என்று அன்வார் கூறினார்.
“மலாய்க்காரர்கள் சிக்கலில் சிக்கியிருப்பது சீனர்களால் அல்ல, அல்லது DAPயாலோ அல்ல. வெறுமனே கதைகளைப் புனையாதீர்கள். மாறாக, பேராசை கொண்ட முந்தைய மலாய் தலைவர்கள்தான் நாட்டின் தற்போதைய அதிக கடன் நிலைமை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என்று, நேற்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு கம்போங் சாவாவில் நடந்த ‘Ramah Mesra Bersama Rakyat Jelajah MADANI’ நிகழ்ச்சியில் பேசும்போது, அன்வார் கூறினார்.





















