முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, 15ஆவது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை நிலை நிறுத்தினார். நான் வாழும் வரை, நான் தொடர்ந்து போராடுவேன் என்று பெஜுவாங் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2018 இல் நடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பானுக்காக வெற்றி பெற்ற தனது லங்காவி தொகுதியை காக்கப் போவதாக மகாதீர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அரசியல் ஆய்வாளர் முஜிபு அப்த் முயிஸ், வருங்கால தேர்தல் வேட்பாளர்களுக்கான வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார். பின்னர் இடைத்தேர்தலை நடத்துவதைத் தவிர்க்க வேட்பாளர்கள் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
97 வயதான மகாதீர், நாட்டிற்கான மாற்றத்தை அடைய மற்றவர்கள் போராடும்போது தன்னால் சும்மா இருக்க முடியாது என்றார். சூழ்ச்சிக்காரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களை எதிர்த்த போராட வேண்டும் என்று நான் விரும்பினால் அவர்களுடன் நான் களத்தில் இறங்க வேண்டும் என்று அவர் கூறினார்.