ஜார்ஜ்டவுன், அக்டோபர் 20 :
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி பட்டு அறிவித்துள்ளார்.
DAP கட்சியைச் சேர்ந்த அவர், தான் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியதாவது : “நான் கெளரவமாக விலகுகிறேன், GE-15 இல் போட்டியிட மாட்டேன், ஏனென்றால் DAP மற்றும் மலேசியாவின் எதிர்கால தலைவர்களுக்கு வழிவகை செய்ய விரும்புகிறேன்.
“பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை இரண்டு முறை தேர்வு செய்த மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய கட்சிக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருப்பேன்.
“இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சித் தலைமை என்னை வற்புறுத்தியுள்ளது, இருப்பினும், நீண்ட நேரம் யோசித்து, நான் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கஸ்தூரியின் கூற்றுப்படி, அவர் DAP கட்சியில் தொடர்ந்தும் இருப்பார், மரண தண்டனையை ஒழித்தல், குழந்தை திருமணம், பாலின சேர்க்கை, சிவில் உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகளில் தனது முயற்சிகளையும் கடமைகளையும் தொடர விரும்புகிறார்.
43 வயதான கஸ்தூரி, 2013 இல் பத்து கவான் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக 25,962 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்றார், GE-14 இல் 33,553 வாக்குகள் அதிக பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.