கூச்சிங், அக்டோபர் 29 :
பார்ட்டி பாங்சா மலேசியாவின் ( PBM) உட்பூசல் காரணமாக டத்தோ சுரைடா, டாக்டர் சதீஸ்குமார் உட்பட 12 உச்ச மன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கட்சியின் சட்டப்பூர்வமான தலைவர் என்று தன்னைக் கூறிக்கொண்ட டத்தோ லாரி சாங் வெய் ஷியென் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், PBM இன் தலைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதால், கட்சி அரசியலமைப்பு ஷரத்து 60 (iii) இன் படி, குறித்த 12 உச்ச மன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.
“எனது தலைமையின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வைத்த மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இத்தகைய அரசியல் சூழ்ச்சியை நான் கடுமையாக வெறுக்கிறேன், கண்டிக்கிறேன்.
தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரத்தை ஆராய ஒரு ஒழுங்குக் குழு அமைக்கப்படும் வரை அவர்களின் பதவிகள் இடைநிறுத்தப்படும்” என்று அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் இடைநிறுத்தக் கடிதங்கள் அவரவர்க்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளன என்றார்.