கூச்சிங், நவம்பர் 13 :
15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், சரவாக்கிற்கு அக் கட்சி வழங்கியுள்ள வாக்குறுதிகள் நம்பகத்தன்மை குறித்து டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“முந்தைய தேர்தல்களில் என்ன நடந்தது என்பது தெரிந்த பிறகு, நீங்கள் அவர்களை நம்ப முடியுமா?” என்று சரவாக் முதல்வரான அபாங் ஜோஹாரி இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) செய்தியாளர்களிடம் வினவினார்.
சரவாக்கில் ஏற்கவே தேர்தலின்போது வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அவர் நினைவுகூர்ந்ததுடன், நேற்று (நவம்பர் 12) பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) ஐ முழுமையாக அமல்படுத்தும் என்றும், சரவாக்கிற்கு சுகாதாரம் மற்றும் கல்வி சுயாட்சியை வழங்கும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தது தொடர்பில் அவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) உடன் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பக்காத்தான் ஹரப்பானுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்து கேட்கபோது , அபாங் ஜோஹாரி எந்த உறுதியும் அளிக்க மறுத்துவிட்டார்.
“முதலில் (தேர்தலில்) போட்டியிடுவோம், பிறகு பார்ப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.