நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு (ஜேஏசி) உறுப்பினர்களை நியமிக்க சுயேச்சையான தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நீதிபதிகளைத் தவிர, JAC உறுப்பினர்கள் சுயேச்சையான தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஹிஷாமுதீன் யூனுஸ் கூறினார். ஜேஏசி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து 15 ஆக அல்லது இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆணையத்திற்க்கு பலதரப்பட்ட நபர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூரினார்.
தேர்வுக் குழுவால் நியமிக்கப்படும் சாதாரண உறுப்பினர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால் சாதாரண உறுப்பினரே தலைவராக இருக்க வேண்டும் என்றார். ஆணையத்தில் அங்கம் வகிக்க விரும்பும் எவரும் தேர்வுக் குழு மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
ஜேஏசி உறுப்பினர்களை நியமிக்க பிரதமரை அனுமதிக்கக் கூடாது என்று நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஆலோசனைக்கு அவர் கருத்துத் தெரிவித்தார். ஆனால் தற்போது ஜேஏசி-க்கு நீதிமன்ற நீதிபதி மற்றும் நான்கு முக்கிய நபர்களை நியமிக்க பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் 260 ஆவது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய துவான்கு முஹ்ரிஸ், நீதிபதிகளை நியமிக்கும் பணியில் பலவீனங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜேஏசிக்கு ஐந்து நியமனங்கள் பிரதமரால் செய்யப்படக்கூடாது என்று அவர் முன்மொழிந்தார். முன்னாள் ஜேஏசி உறுப்பினரான ஹிஷாமுதீன், துவாங்கு முஹ்ரிஸின் முன்மொழிவை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும், பதவி உயர்வு அளிக்கவும், சட்டப் பயிற்சி பெற்றவர்களும், சட்டப் பயிற்சி பெறாதவர்களும் ஜேஏசியில் இருக்க வேண்டும் என்றார்.
ஜேஏசிக்கு சட்டத் தகுதிகள் உள்ளவர்களாக நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்வியாளர்கள் இருக்க வேண்டும் என்றும், சட்ட நிபுணத்துவம் இல்லாதவர்களாக நுகர்வோர், தொழிற்சங்கங்கள், மனித உரிமைகள் மற்றும் பெருநிறுவன பிரமுகர்கள் போன்ற பலதரப்பட்ட நபர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஜேஏசி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக உள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான நான்கு உயர் நீதித்துறை நிர்வாகிகள், அத்துடன் ஒரு மூத்த பெடரல் நீதிமன்ற நீதிபதி மற்றும் நான்கு முக்கிய நபர்கள் பிரதமரால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் இரண்டு தலைமை நீதிபதிகள் (மலாயா உயர் நீதிமன்றம், சபா மற்றும் சரவாக்) நிர்வாகப் பதவிகளை வைத்திருப்பதன் மூலம் தானாகவே JAC இல் இடம்பெறுவார்கள்.