ஜார்ஜ் டவுன்:
கெடாவில் உள்ள 4 இலக்க விற்பனை நிலையங்களின் உரிமத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்ற முடிவை மாநில அரசு கடைப்பிடித்தால், அங்கு சட்டவிரோத சூதாட்டம் செழித்து வளரும் என்று குற்றவியல் நிபுணர் டத்தோ டாக்டர் பி.சுந்திரமூர்த்தி தெரிவித்தார்.
“இந்தக் கடைகள் மூடப்பட்டால் சட்டப்பூர்வ 4D விற்பனை நிலையங்களின் வழக்கமான பந்தயம் விளையாடுபவர்கள் நிச்சயமாக சட்டவிரோத தரகர்களை அணுகி, பந்தயம் கட்டுவதற்கு 100 விழுக்காடு சாத்தியம் உள்ளது “ என்று, மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் நிபுணரான அவர் கூறினார்.
“நம்பகமான ஆதாரங்களின்படி, சட்டவிரோத 4D சூதாட்டத்தை நடத்துபவர்கள் மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள், ஏனெனில் அவர்கள் இப்போது முறையான இணைய கேசினோக்கள் மற்றும் பிற கேமிங் தொழில்களைப் போலவே இணையத்தில் செயல்பட முடியும்,” என்று அவர் கூறினார்.
“மேலும், சட்டவிரோத சூதாட்ட கும்பல்களைக் கண்டறிந்து பிடிப்பது மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கும்,” என்றும் சுந்தரமூர்த்தி கூறினார்.
அத்தோடு கெடாவில் உள்ள முந்தைய சட்டப்பூர்வ 4D விற்பனை நிலையங்களிலிருந்து பெறப்பட்ட வரி முற்றிலும் இல்லாது போய்விடும் என்றும், இதநாள் மாநில அரசாங்கம் வருமானத்தை இழக்கும் என்றும் சுந்தரமூர்த்தி மேலும் கூறினார்.
“மேலும், ஒரு சட்டப்பூர்வ வணிகம் சட்டவிரோதமாக மாறும் போது, சட்டவிரோத கேமிங் நிறுவனங்களின் நடத்துனர்கள், சட்டவிரோத கேமிங் நடவடிக்கைகளைத் தடுப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பது மிகவும் வெளிப்படையானது,” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், கெடா MCA இளைஞர் பிரிவு தலைவர், டான் சீ ஹியோங் கூறுகையில், இந்த கொள்கை மலேசிய சமுதாயத்தை பிளவுபடுத்தும் என்று அவர் மாநில அரசாங்கத்தை எச்சரித்தார்.
மேலும் இது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், இது தீவிரவாதத்திற்கு ஆதரவான கொள்கை என்றும் டான் கூறினார்.
“இது மலேசியாவில் தீவிரவாதத்தின் தொடக்கப் புள்ளியாகும். வரும் மாநிலத் தேர்தலில் இதைத் தடுக்க வாக்காளர்கள் ஏதாவது செய்ய வேண்டும். கெடாவில் பன்முக கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1), கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர், ஜன. 1, 2023 முதல் மாநிலத்தில் கேமிங் உரிமங்களை இனி புதுப்பிக்க முடியாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.