அலோர் ஸ்டார்:
இந்தாண்டு ஜனவரி 1 முதல் கெடா மாநிலம் முழுவதும் இயங்கிவரும் சூதாட்டம் மற்றும் அதிஷ்டலாப சீட்டு விற்பனை நிலையங்கள் மூடப்படுவதால் கெடா அரசின் வருமானம் பாதிக்கப்படவில்லை என்று, கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி தெரிவித்துள்ளார்.
தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டு மாநில சூதாட்ட வளாகங்கள் மூலம் ஆண்டுக்கு 4 இலட்சம் வெள்ளி மட்டுமே மாநில அரசுக்கு கிடைத்தது என்றும் அவர் கூறினார்.
மேலும் சூதாட்ட வளாகங்களிலிருந்து பெறப்பட்ட வருமானம் மிகக் குறைவு, அதாவது RM400,000 மட்டுமே ஆனால், அது RM400 மில்லியனாக இருந்தாலும், நான் சூதாட்டம் மற்றும் அதிஷ்டலாப சீட்டு விற்பனை வளாகங்கள் அனைத்தையும் மூடுவேன். எனெனில் அதிலிருந்து பெறப்படும் தொகை மிகவும் சிறியது ஆனால் சூதாட்டத்தின் விளைவுகள் மிகப்பெரியவை என்று அவர் கூறினார்.
“இந்த விஷயம் சூதாட்ட வளாகங்களின் உரிமையாளர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்த சூதாட்ட வளாகங்களை மூடுவதற்கான முடிவு கடுமையாக எடுக்கப்படவில்லை என்பதையும், அவர்கள் தங்கள் வணிகங்களைத் திசைதிருப்புவதற்கான தயாரிப்புகளைச் செய்திருக்க வேண்டும் என்பதையும் நான் கூற விரும்புகிறேன்.
“எனவே, பொதுமக்கள் தொடர்ந்து சூதாட்டம் நடப்பதாக தெரிந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
டிசம்பர் 31, 2022 அன்று, கெடா மாநிலத்தில் காலாவதியான சூதாட்ட உரிமங்களை புதுப்பிக்கப் போவதில்லை என்று மாநில அரசு முடிவு செய்ததை அடுத்து, ஜனவரி 1 அன்று, கெடாவில் உள்ள அனைத்து சூதாட்ட மற்றும் அதிஷ்டலாப சீட்டு விற்பனை வளாகங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.