ஜோகூர் மாநிலத்தில் புதிய கோவிட் -19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஜோகூர்வாசிகள் தமது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகளை விரைந்து போட்டுக்கொள்ளுமாறு மாநில மந்திரி பெசார், டத்தோ ஒன் ஹபீஸ் காஸி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோகூரில் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளவர்களின் சதவீதம் இன்னும் குறைவாக உள்ளதாகவும், அதாவது 1.9 விழுக்காட்டினர் மட்டுமே கோவிட் -19 க்கு எதிராக இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக, மாநில சுகாதார இயக்குனர், டத்தோ டாக்டர் அமன் ராபு வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறினார்.
“கோவிட்-19 இறுதிக் கட்டத்திற்கு மாறும்போது நாம் அதனுடன் இணைந்து வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம் என்றாலும், பிஏ.5.2 மற்றும் பி.7 போன்ற புதிய மாறுபாடுகளும் தற்போது தோன்றியுள்ளன. ஜோகூர் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அனைத்துலக நுழைவுவாயிலாகும், எனவே மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று ஓன் ஹபீஸ், இன்று தனது பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.