பகாங்கில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தின் போது, தற்காலிக வெளியேற்ற மையங்களுக்கு இடம் பெயர்ந்த 802 குடும்பங்கள் தலா RM1,000 நிதி உதவியைப் பெறுவார்கள் என்று, அம்மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் வாங் இஹ்சான் (BWI) நிதி உதவியானது, ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் தலா RM1,000 என்ற அடிப்படையில், வெள்ளம் ஏற்பட்டவேளை தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்த 802 குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.
“இந்த நிதி உதவி குறித்த பெறுநர்களிரிடம் பிப்ரவரி 16 க்குப் பிறகு ஒப்படைக்கப்படும் என்றும் இந்த உதவியானது தேசிய பேரிடர் மேலாண்மை அமலாக்க பிரிவிலிருந்து (நட்மா) ஆரம்ப ஒதுக்கீடாக சுமார் RM1 மில்லியன் பகாங் அரசாங்கச் செயலர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது ” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது, பகாங்கில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இந்த சிறிய நிதி உதவி அவர்களது அன்றாட வாழ்க்கை சுமையை குறைக்க உதவும் என நம்புவதாகவும் வான் ரோஸ்டி கூறினார்.