பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது வினித் சீனிவாசன் ஜோடியாக ‘தன்கம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். சஹீத் அராபத் இயக்கியுள்ளார். கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது ஒரு மாணவர் மேடையில் ஏறி திடீரென்று அபர்ணா பாலமுரளி கையை பிடித்தார். பின்னர் போட்டோ எடுப்பதற்காக அபர்ணா பாலமுரளியின் தோள் மீது கை போட்டபடி நெருங்கினார்.
இதனால் எரிச்சல் அடைந்த அபர்ணா பாலமுரளி அவரின் பிடியில் இருந்து நழுவி விலகி சென்றார். மீண்டும் அந்த மாணவர் நான் உங்கள் ரசிகன் என்று கூறியபடி கைகொடுக்க முயன்றபோது அபர்ணா பாலமுரளி கைகொடுக்க மறுத்து விட்டார். இந்த வீடியோ காட்சி வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.