தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்தாண்டு சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்… பின்னர் ‘யசோதா’ படத்திற்கு டப்பிங் பேசியபோது தான் மயோசிட்டிஸ் எனப்படும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்து, அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் சமந்தா கூடிய விரைவில் மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வர தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக, பல மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்த சமந்தா, ‘யசோதா’ திரைப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தலா ஒரு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியில் தன்னுடைய உடல்நிலை மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி ரசிகர்கள் மனதை உருக வைத்தார்.
கடுமையான உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் போதும், சமந்தா தன்னுடைய படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தது திரை உலகினரை ஆச்சரியப்பட செய்தது. மேலும் சமீப காலமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த சமந்தா, தற்போது தன்னுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளார். எனவே கடந்த மாதம் முதல், மீண்டும் தன்னுடைய சூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதே போல் சமீபத்தில் நடந்த ‘சகுந்தலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு கண் கலங்கியபடி பேசினார். மேலும் இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில பிரச்சினைகளின் காரணமாக பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாகாது என்றும் மற்றொரு தேதியில் ரிலீஸ் ஆகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.