கடந்த மாதம் ஒரு வீட்டை உடைத்து திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இந்திய ஆடவர்கள் நேற்று புக்கிட் மெர்தாஜாம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களான எம்.பஞ்சநாதன், 36, மற்றும் ஆர். ஷர்வின், 22, ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை, மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூருல் ரசிதா முகமட் அகிட் முன் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
முதல் குற்றச்சாட்டின்படி, ஜனவரி 18ஆம் தேதி நண்பகல் 1.15 மணியளவில், தாமான் மச்சாங் புபோக்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து ரோலக்ஸ் வாட்ச், தங்க வளையல் மற்றும் ஐந்து தங்க பென்டென்ட் என்பவற்றை திருடியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பினாங் மெகாமால் வளாகத்தில் உள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான சோனி பிளேஸ்டேஷன் 3 வீடியோ கேமை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதல் குற்றச்சாட்டிற்கு RM6,000 ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது, இரண்டாவது குற்றச்சாட்டுக்கான ஜாமீன் RM4,000 ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும் இந்த வழக்கு அடுத்த மார்ச் 10-ம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.