“Jom Ziarah Gereja ” திட்ட விசாரணை தொடர்பில் தான் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோஹ் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (மார்ச் 20) மாலை 5.30 மணியளவில், செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வந்த சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்ன, தனது வாக்குமூலத்தை வழங்கியதுடன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகக் கூறினார்.
“யாருடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை, இந்த விசாரணை தொடர்பில் முழுமையாக ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். காவல்துறையிடம் நான் கொடுத்துள்ள வாக்குமூலம் பாராளுமன்றத்தில் நான் கூறிய விஷயங்களுடன் ஒத்துப்போகும்,” என்றும் யோஹ் கூறினார்.
ஹன்னா யோவுடன் அவரது வழக்கறிஞர் சங்கீத் கோர் தியோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் அரச சார்பற்ற இயக்கம் மூலம் தொடங்கப்பட்ட “Jom Ziarah Gereja ” திட்டம், பின்னர் ரத்து செய்யப்பட்டாலும், அது தொடர்பில் நேற்று (மார்ச் 19) காவல்துறை இரண்டு புகார்களை பெற்றதாகவும், அதன் அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்றும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.