கோலா நெராஸ் நகரில் மாற்றியமைக்கப்பட்ட பட்டாசுகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அவை திடீரென வெடித்ததில் ஆடவர் ஒருவரின் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் 27 வயதுடைய அந்த நபருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், வான் முகமட் ஜாகி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
தனது வீட்டிற்கு வெளியே இருந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக கூறிய பாதிக்கப்பட்டவரின் முத்த சகோதரர், தான் எதோ சண்டை நடந்ததாக நினைத்து உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டதாக கூறினார்.
“இருப்பினும், அங்கு சென்று பார்த்தபோது தனது சகோதரரின் கைகளில் வெடித்த பட்டாசுகளிலிருந்து அந்த சத்தம் வந்ததை தான் உணர்ந்தார்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தற்போது சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வெடிபொருள் சட்டம் 1957ன் பிரிவு 8ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வான் முகமட் சாகி கூறினார்.