நேற்று, கோலா லங்காட்டின் சுங்கை ஜரோமில் உள்ள கம்போங் ஸ்ரீ சீடிங்கில், சாலையோரத்தில் மின்னல் தாக்கியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று, கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ரித்வான் முகமட் நோர் @ சாலேஹ் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மாலை 6.31 மணியளவில் அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்றும், முதற்கட்ட விசாரணையில், பலியானவர் உள்ளூர்வாசி என்றும் , பண்டார் மஹ்கோத்தா பந்திங்கில் உள்ள தொழிற்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் ரிம்பாயு பாலத்தில் இருந்து ஸ்ரீ சீடிங் தேயிலை தொழிற்சாலைக்கு அச்சாலை வழியாக சென்றபோது, மின்னல் தாக்கி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர், 50 மீட்டர் முன்னோக்கி விழுந்து சுயநினைவை இழந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரைக் கண்ட பொதுமக்கள், அவரை சாலையோரம் தூக்கிச் செல்ல உதவியதாகவும், MERS 999 என்ற எண்ணை அழைத்ததாகவும் கூறினார்.
“விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க நபரின் கழுத்தின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டிருப்பதும், மின்னல் தாக்கியதால் வயிறு மற்றும் தொடையில் காயம் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், பாதிக்கப்பட்டவரின் கன்னம் மற்றும் முழங்கால்களில் காயங்கள் இருந்தன. பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் சாலையில் இரண்டு மின்னல் துளைகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பிரேதப் பரிசோதனையில் மின்னல் தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டதாகவும், இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசர் வகைப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.