ஜாலான் கோலா சிலாங்கூர்-கோலாலம்பூர் சாலையில் கோலா சிலாங்கூர் நோக்கிய திசையில், சாகசம் புரிந்து கொண்டு, ஆபத்தான முறையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் காணொளி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
20 வயதுடைய இருவரும் ஆபத்தான முறையில் சவாரி செய்யும் வீடியோ டுவிட்டரில் வைரலானதாக, கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ராம்லி காசா கூறினார்.
ஜாலான் கோலா சிலாங்கூர்-கோலாலம்பூர் சாலையின் கிலோமீட்டர் 16 இல் இந்தச் சம்பவம் நடந்தது என்றும், கடந்த சனிக்கிழமை காலை 8.48 மணியளவில், வாட்ஸ்அப் செயலி மூலம் 0.23 வினாடிகள் நீடித்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் ஆபத்தான சவாரியைக் காட்டும் வீடியோப் பதிவு போலீசாருக்கு கிடைத்தது.
அதன் விளைவாக, இரண்டு மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு, பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் Yamaha Y15ZR என்பது கண்டறியப்பட்டது என்றும், அவ்வேளையில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அதே நாளில் இரவு 10 மணியளவில் கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்தனர் என்றும், ராம்லி கூறினார்.
இருவருக்கும் எதிராக சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 42 (1) இன் படி விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.










