அல்லாஹ்” என்ற வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த அனுமதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கம் தொடுத்திருந்த மேல்முறையீட்டை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
மேன்முறையீட்டை வாபஸ் பெறுவதற்கான நோட்டீஸ் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சட்டத்துறை தலைவரால் தாக்கல் செய்யப்பட்டது.
கூட்டரசு மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசன் ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
13 வருடத்திற்கு முன்னர் சரவாக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், அல்லாஹ் உட்பட இன்னும் மூன்று வார்த்தைகளை முஸ்லிம் அல்லாதவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தே அரசாங்கம் மேன்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.