மனைவிக்கு 2-ம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதைத்தொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்டனர். பின்னர் போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட இருந்தது.

அப்போது போட்டியில் 2-ம் இடம் பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறினார். அவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார். இதனால் அந்த கிரீடம் துண்டுதுண்டாக உடைந்தது.

இதைப்பார்த்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர்.

அப்போது நதாலியின் கணவர் கூறுகையில், நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் ஆத்திரத்தில் இவ்வாறு செய்தேன் என்றார்.

ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிதும் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here